தமிழகத்தில் ரெம்டேசிவிர் மருந்தை பெற இணையதளம் அறிமுகம்….!

மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ரெம்டேசிவரை பெற்றுக்கொள்ள tnmsc.tn.gov.in என்ற இணையதள பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டோர் பலர் படுக்கை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ரெம்டேசிவிர் மருந்தை தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம் வழங்கிவருகிறது. தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோவை, திருச்சி, மதுரை நெல்லை ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களிலும் நோயாளிகளின் குடும்பத்தினர் நேரடியாக சென்று மருந்தினை வாங்கி வருகின்றனர்.
இந்த மருந்தை பெற மக்கள் பல இடங்களில் கூட்டம் கூடுவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும், கள்ளச்சந்தைகளில் இந்த மருந்து விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, தற்போது மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ரெம்டேசிவரை பெற்றுக்கொள்ள tnmsc.tn.gov.in என்ற இணையதள பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம், மருத்துவமனை விபரம், தொற்று அறிகுறிகள், இணை நோய் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் கவுண்டர்களில் தனியார் மருத்துவமனைகள் பெற்றுக்கொள்ளலாம். அதற்குரிய தொகையையும் அங்கேயே செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.