விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணமோசடி.! மேலாளர் மிரட்டல் விடுத்ததாக பெண் குற்றச்சாட்டு.!

விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கணக்காளர் பணமோசடி செய்ததாக கூறியதை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அந்த பெண் கணக்காளர் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் விஷால் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியில் பணிபுரியும் ரம்யா என்பவர் ரூ. 45 லட்சம் மோசடி செய்ததாக கூறி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளரான ஹரி, கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து சென்னை விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மோசடி செய்த கணக்காளரான ரம்யா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனக்கும் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் தான் மோசடி செய்ததாக கூறப்பட்டதை மறுத்ததோடு, மேலாளர் ஹரியின் ஆதரவாளர்கள் சிலர் தனது வீட்டில் வந்து மிரட்டியதாகவும், தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் பொது இடத்தில் வைத்து கணக்குகளை ஒப்படைக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலாளர் கூறுகையில், ரம்யா பண மோசடி செய்ததை ஒப்பு கொண்டதோடு, காவல் நிலையத்தில் வந்து சமரசம் செய்ய தயார் என்றும் தெரிவித்துள்ளதாக கூறினார். தற்போது இந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.