பழக்கடைகளை பந்தாடிய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு அதிரடி மாற்றம்…..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமுக இடைவெளியை கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை சமூக இடைவெளி இன்றி பழங்களை விற்பனை செய்த மூன்று கடைகளில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் திரு. சிசில் தாமஸ் அவர்கள் பழங்களை கீழே தள்ளி கடைகளை காலிசெய்தார்.  இது தொடர்பான  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பல்வேறு கட்சிகளிடம் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  இன்று  காலை 10 மணிக்கு அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு  நேரில் சென்ற நகராட்சி ஆணையர், பழ கடை உரிமையாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்தார். மேலும் விற்பனை செய்யும் போது சமூக இடைவெளி விட்டு மீண்டும் விற்பனை செய்யவேண்டும் எனவும் அவர்களுக்கு  அறிவுறுத்தினார்.  இதற்கு மத்தியில், இவரின் அந்த மனித தன்மையற்ற செயலை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததோடு நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் விடுத்தது.  இந்த நிலையில், தற்போது வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ்  காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  நகராட்சி நிர்வாக ஆணையர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்

author avatar
Kaliraj