ஜூன் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை தொடங்கும் – பாரத் பயோடெக் நிறுவனம்!

ஜூன் மாதம் முதல் கோவக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனைகளை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும்  கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தற்பொழுது மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவை ஒழிப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி போடுவது மட்டுமே என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, மக்கள் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் குழந்தைகளுக்கும் தடுப்பூசி வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்றும் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனைகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் மனித மேம்பாடு மற்றும் சர்வதேச ஆலோசனை தலைவர் டாக்டர் ரேச்ஸ் எலா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் ஹைதராபாத்தை சேர்ந்த பெண்கள் அமைப்புடன் பேசிய பொழுது, கடந்த ஆண்டு கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தியை மேம்படுத்துவதில் தாங்கள் அதிக கவனம் செலுத்தியதாகவும், இப்பொழுது அதன் திறனை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளும் உரிமம் பெறும் எனவும் தெரிவித்துள்ள அவர், தங்கள் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட கூடிய கோவாக்சின் தடுப்பூசிக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவு கிடைத்தது தங்களுக்கு மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal