புதிய பல்கலைக்கழகத்திற்கு முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் பெயர் – கௌரவப்படுத்தும் உத்தரகாண்ட் அரசு!

உத்தரகாண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும்  பல்கலைக்கழகத்திற்கு முப்படைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குன்னூரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.இதனையடுத்து,13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகள் மலர் தூவியும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்று காலை 11 மணி முதல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவிற்கு பொதுமக்களும், ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் திமுக எம்.பிக்கள் ஆகியோர் பிபின் ராவத் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையில்,முப்படைத் தளபதியின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் உடலுக்கும் இறுதி அஞ்சலி நடைபெற்று தகனம் செய்யப்பட்டது.

இதைதொடந்து, பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது சாலை எங்கிலும் இறுதி ஊர்வலத்தில் தேசிய கொடியுடன் முழக்கமிட்டு மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

கன்டோன்மென்ட் மயானத்தில் பிபின் ராவத் இரு மகள்கள், குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர். அங்கு பிரிட்டன், பிரான்ஸ், தூதர்கள் இலங்கை, பூடான்  நேபாளம், வங்காளதேசம் ராணுவ தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இராணுவ வீரர்கள் இசை முழங்க இதய அஞ்சலி செலுத்தப்பட்ட பின், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதியாக பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடல்கள் தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டு 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க 800 ராணுவ வீரர்களின் மரியாதையுடன் இருவரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது.

இதனையடுத்து,விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் அஸ்தி ஹரித்வாருக்கு கொண்டு செல்லப்பட்டு கங்கையில் இன்று கரைக்கப்பட்டது.

இதற்கிடையில்,நேற்று உத்தரகாண்ட் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது.அப்போது,முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அதன்பின்னர் அம்மாநில தேவப்பிரயாகை தொகுதி எம்.எல்.ஏ ஒருவர், உத்தரகாண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு முப்படைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் பெயரை சூட்ட தீர்மானம் கொண்டு வந்தார்.இந்த தீர்மானம் சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரின் ஆதரவோடு நிறைவேறியதாக கூறப்படுகிறது.

மறைந்த பிபின் ராவத் அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.இந்த நிலையில்,புதிதாக கட்டப்பட்டு வரும்  பல்கலைக்கழகத்திற்கு பிபின் ராவத் அவர்களின் பெயரை சூட்டி, உத்தரகாண்ட் அரசு கௌரவப்படுத்தவுள்ளது.