சென்னை வெள்ள பாதிப்பு.! ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு.! 

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழைநீர் புகுந்து, புறநகர் முழுக்க வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை முழுதாக வெளியேற்ற ஊழியர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

முதலமைச்சரிடம் வெள்ள சேதம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

மிக்ஜாம் புயல் – மழைவெள்ள பாதிப்புகளை சரி செய்ய நிவாரண உதவிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார் . அதில் 5060 கோடி ரூபாய் நிவாரண உதவி தொகையாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட வருவார் என கூறப்பட்டது.

அதன்படி இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை புரிந்தார்.   பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை , செயல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வு பணிகள் முடிந்த உடன், தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். அதன் பிறகு வெள்ள பாதிப்பு நிவாரணம் குறித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.