பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

2024-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் முதற்கட்ட பாதயாத்திரை மேற்கொண்டார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த முதல்கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை கடந்து 22ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார்.

என் மண், என் மக்கள் யாத்திரையின் முதற்கட்ட பயணம் நெல்லை சட்டமன்ற தொகுதியுடன் நேற்று நிறைவு பெற்றது. இந்த நடைப்பயணத்தின்போது பல்வேறு பொதுக்கூட்டங்கள் பங்கேற்று பேசிய அண்ணாமலை, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் கட்ட பயணம் செப்டம்பர் 3 ஆம் தேதி தென்காசியில் தொடங்கி, 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரிகையை பாஜகவினர் வரவேற்று அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்தவகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கூறுகையில், என் மண் என் மக்கள் நடைபயண முதற்கட்டதை வெற்றிகரமாக முடித்துள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள். அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தை ஊழலில் இருந்து விடுவித்து சட்டம் ஒழுங்கை சீர் செய்யும். பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நூற்றுக்கணக்கான கி.மீ நடந்த இந்த நடைப்பயணத்தில் அண்ணாமலை எழுப்பியிருக்கும் விஷயங்கள் மக்களை சென்று சேர்ந்துள்ளது.

என் மண் என் மக்கள் நடைபயணம் தமிழகத்தை  அரசியலில் இருந்து விடுவிக்கும். புதிய வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமரின் எண்ணத்தில் வெளிப்பாடாக இந்த நடைபயணம் உள்ளது. புகார் பெட்டி மூலம் சுமார் 1000 புகார்கள் தமிழக அரசின் மீது ஊழல் குற்றசாட்டுகளை வைத்துள்ளனர். உண்மையில் அதிர்ச்சியான விஷயம் இது. வந்துள்ள புகார்கள் ஒரு விழிப்பை ஏற்பத்தியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்பு எங்களின் முக்கியமான விஷயமாகும்.

பழமையான பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியதன் மூலம் தமிழ் கலாச்சாரம் மீது தான் கொண்டுள்ள பற்றை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார். எனவே, அண்ணாமலையின் இரண்டாம் கட்டம் நடைப்பயணமும் மாபெரும் வெற்றி அடையும் என நம்புகிறேன்.

நேர்மறை மாற்றங்களை கொண்டுவந்து மக்களை ஊக்கப்படுத்தி தமிழகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். என் மண் என் மக்கள் யாத்திரை இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தை ஒன்றிணைத்துள்ளது. தமிழகம் இழந்த பெருமையை மீட்டெடுக்கவும், பிரகாசமாக எதிர்காலத்தை உருவாக்கவும் இந்த நடைபயணம் உதவும் என்றும் வாருங்கள் ஒன்றிணைந்து தமிழகத்தின் பெருமையை மீட்டெடுப்போம் எனவும்  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்