#U19WorldCupFinal: இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் கடந்த 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு ஆஸ்திரேலியா பழிதீர்த்துக் கொண்டது. 15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது.

16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றன. இன்றைய தினம் இறுதிப்போட்டியானது பெனோனியில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் அந்த அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. ஹர்ஜஸ் சிங் 55 ரன்களும், கேப்டன் ஹக் வெய்ப்ஜென் 48 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்களையும், நமம் திவாரி 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் திணறினார்கள். அணியின் வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் இறுதியில் இந்தியா 43.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வெல்வது இது நான்காவது தடவையாகும்.

ரோஹித்தின் கண்ணீருக்கு பழிக்கு பழி வாங்குமா இந்திய இளம் படை..!

கடந்தாண்டு ஆஸ்திரேலியா சீனியர் அணி உலகக்கோப்பை தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களின் இறுதிப்போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் தற்போது ஜூனியர் ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment