“டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்படுவார்” – பைடன் தரப்பில் எச்சரிக்கை!

டிரம்ப் தோல்வியடைந்து, அதனை ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றபடுவார் என பைடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கொரோனா பரவலுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் பணிகள் சிறப்பாக நடந்தது. பல்வேறு மாகாணங்களில் யார் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று தொடர்ந்து பின்னடைவை சந்தித்தார்.

மேலும், பென்சில்வேனியா உட்பட 3 மாகாணங்களில் வாக்குகளை எண்ணுவதில் முறைகேடுகள் நடப்பதாக டிரம்ப் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் வழக்குகளை ஜார்ஜியா, மிக்சிகன் மாகாண நீதிமன்றங்கள் நிராகரித்துள்ள நிலையில், ஜார்ஜியாவில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் பென்சில்வேனியா மாகாணத்தில் 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். மேலும், ஜார்ஜியாவிலும் பைடன் முன்னிலை வகித்து வருகிறார். டிரம்ப் பின்னடைவிலே இருக்கும் நிலையில், தோல்வியடைந்தால் அவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்வாரா? என்ற கேள்வி அமெரிக்க மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜோ பைடனின் செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரு பேட்ஸ், அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்படுவர் எனவும், வெள்ளை மாளிகையில் அத்துமீறி தங்கிருப்போரை வெளியேற்றும் உரிமை அமெரிக்க அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அந்த உரையில் தெரிவித்துள்ளார்.