தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.19) விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் வரலாறு காணாத அதி கனமழை பெய்து வருகிறது.

ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் கடும் மழை,வெள்ளத்தால் ஒட்டுமொத்த மக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பரிதவிக்கிறார்கள்.

ரெட் அலர்ட் தொடரும்! அதி கனமழை தான், மேகவெடிப்பு அல்ல… வானிலை ஆய்வு மையம்!

கனமழையால் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த சூழலில், ஏற்கனவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, தூத்துக்குடி, நெல்லை தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து,  இன்றும் இந்த 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, அம்மாவட்டத்தில் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையால் இன்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்