TokyoParalympics:பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்;மாரியப்பன்னுக்கு பதில் தேசிய கொடியை ஏந்தும் தேக்சந்த்..காரணம்?

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. போட்டிக்கு முன்னதாக நடைபெறும் தொடக்க நிகழ்வில் தேக்சந்த் தேசிய கொடியை ஏந்துகிறார்.

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி முதல் கடந்த 8 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில்,மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.மேலும்,இப்போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுகின்றன.

இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.தடகளம், பேட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், வில்வித்தை,துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 22 விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

இந்திய அணியில் 54 வீரர், வீராங்கனைகள்:
இந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது.அதிக வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.
கலந்து கொள்ளும் போட்டிகள்:
இந்திய அணி வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், வலுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, கனோயிங் (சிறிய வகை துடுப்புபடகு) ஆகிய 9 போட்டிகளில் கலந்து கொள்கிறது.
பாராஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது. அதிகபட்சமாக கடந்த (2016) பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருந்தது.
தேசிய கொடியேந்தும் டெக்சந்த் – மாரியப்பன் ஏற்றாததன் காரணம்?
ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ஒலிம்பிக் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போன்று  பாராலிம்பிக் போட்டியையும் நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் ஜப்பான் பேரரசர் நருஹிடோ கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்திய அணிக்கு கடந்த (2016) பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வதாக இருந்த நிலையில்,டோக்கியோ செல்லும் விமானத்தில், மாரியப்பன் ஒரு கொரோனா பாசிட்டிவ் வெளிநாட்டு பயணியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் அவருக்கு 6 நாட்கள் பரிசோதனை நடத்தப்பட்டு கொரோனா நெகடிவ் என வந்தது.எ னினும்,மாரியப்பனை பங்கேற்க வேண்டாம் என்று பாராலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இதனால்,மாரியப்பனுக்குப் பதிலாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற தேக்சந்த் தேசிய கொடி ஏந்தி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.