இன்று தனித்துவமான தமிழ் புத்தாண்டு..! உருவான வரலாறு மற்றும் பாரம்பரியம் இதோ..!

உலகெங்கும் வாழும் அனைவரும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர் நாட்காட்டியில் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

வரலாறு : 

தமிழர்கள் பூமி, சூரியனை  அடிப்படையாக வைத்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். ஒரு வருடத்தில் மொத்தமாக 12 மாதங்கள் உள்ளன. ஆனால், சித்திரை மாதமே ஆண்டின் முதல் மாதமாக உள்ளது. அறிவியல் ரீதியாக பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதன் மூலமாகவே தமிழ் வருடத்தின் கால அளவு பின்பற்றப்படுகிறது.

மேலும், சூரியன் மேச இராசியில் பிரவேசிப்பதை ஆண்டின் தொடக்கமாகவும், மீன இராசியிலிருந்து வெளியேறுவது ஆண்டின் முடிவு என்றும் கணக்கிடப்படுகிறது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள் மற்றும் நேரம் கணிக்கப்படுகிறது.

சான்றுகள் :

முன்பெல்லாம் தமிழர்கள், புத்தாண்டைக் கொண்டாடினார்கள் என்பதற்கான சான்றுகள் சரிவர கிடைக்கவில்லை. ஆனால், ஆவணி மாதத்தை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டாடியிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதன்படி, தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரும் ஆவணியே தமிழ் வருடத்தின் முதல் மாதம் என்கின்றார்.

இருந்தாலும், தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை வைத்து கணித்து பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரண்டு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பதால் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சங்க இலக்கியமான நெடுநல்வாடை மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி போன்ற நூல்கள் சித்திரை மாதம் தான் முதல் மாதம் என்று கூறுகின்றன.

பாரம்பரியம் :

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் தமிழர்கள் வீடு வாசலை சுத்தம் செய்து, வீட்டை அலங்கரிப்பர். பிறகு, மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தாம்பூலத்தை சாமி அறையில் வைத்து, அதை புத்தாண்டு அன்று அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. மேலும், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் வாழும் தமிழ் மக்களும் இந்த புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment