தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கையை சேர்ந்தவர்கள் தாக்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை நேற்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது எனவே, இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தாக்குதல் : அந்த கடிதத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவ கிராமத்தில் இருந்து ஆறு மீனவர்கள் கடந்த 15ஆம் தேதி தோப்புதுறைக்கு கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள். அப்போது மூன்று படங்களில் சுமார் பத்து இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்கள் வந்த படகினை சூழ்ந்து கொண்டார்கள்.
கொள்ளை : பிறகு, அவர்கள் வைத்திருந்த இரும்பு கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களால் தமிழக மீனவர்களை இலங்கை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதில் தமிழக மீனவர் ஒருவரின் தலை மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், தமிழக மீனவர்களிடம் இருந்த வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, 200 கிலோ மீன் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை இலங்கை ராணுவத்தினர் எடுத்துச் சென்றதாகவும், தற்போது காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வலியுறுத்தல் : மேற்கண்ட சம்பவத்தை விவரித்து, இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், காயமடைந்த மீனவருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.