சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் மருத்துவர் கனவை நிறைவேற்ற காரணம் இந்த செங்கல் தான்- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை பேச்சு.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்னும் 6 நாட்களே இருக்கின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இடைத்தேர்தல் களத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுவுக்கு ஆதரவாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் அண்ணாமலை பேசியபோது திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் உதயநிதிக்கு பதிலளிக்கும் விதமாக செங்கலை எடுத்து காண்பித்து, இது போன்ற நிறைய செங்கல்கள் தான் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.
இந்த மருத்துவக்கல்லூரிகளில் 1800 மருத்துவ இடங்களில், சாதரண குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர் அதற்கும் இந்த செங்கல் தான் காரணம் என அவர் தெரிவித்தார். மேலும் தருமபுரியில் சிப்காட் அமைப்பதாக வாக்குறுதி அளித்த திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த செங்கலை தான், உதயநிதிக்கு பார்சல் அனுப்பபோவதாக அண்ணாமலை கூறினார்.
முன்னதாக அமைச்சர் உதயநிதி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இன்னும் கட்டப்படவில்லை என செங்கலை காண்பித்து வாக்கு சேகரித்தார், அதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலையும் செங்கலை காண்பித்து வாக்கு சேகரித்தார்.