இது மனித உரிமை மீறல், அதை அனுமதிக்க முடியாது! – டாக்.ராமதாஸ்

தீக்குளித்த கண்ணையாவுக்கு உலகத்தர மருத்துவம் அளித்து அவரை காப்பாற்ற வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட். 

சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் ஒருவர் அவரது வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடிக்கப்படுவதை கண்டித்து தீடிரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற  நிலையில், பாமக நிறுவனர் டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர்  பக்கத்தில்,’சென்னை இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீடுகள் வருவாய்த்துறையினரால் இடிக்கப்படுவதைக் கண்டித்து கண்ணையா என்ற ஏழைப் பாட்டாளி தீக்குளித்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கோவிந்தசாமி நகரில் உள்ள மக்கள் பல பத்தாண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சென்னையின் பூர்வகுடிகள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்களின் வீடுகளை இடித்து சென்னையை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை மீறல்; அதை அனுமதிக்க முடியாது!

கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தீக்குளித்த கண்ணையாவுக்கு உலகத்தர மருத்துவம் அளித்து அவரை காப்பாற்ற வேண்டும். படுகாயமடைந்த அவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.