ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானவை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஆசிப் கைது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானவை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஆசிப் கைது செய்யப்பட்டார். ஹரியானா – ராஜஸ்தான் எல்லையிலுள்ள ஆரவல்லி மலைப்பகுதிகளில் பல சவால்களுக்கிடையே துப்பாக்கி முனையில் ஆசிப் கைது செய்யப்பட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதி தொடர்ந்து 4 ஏடிஎம்களில் ரூ.72.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு ரூ.20 லட்சம் ரொக்கம், 3 கார்கள் மற்றும் கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஏடிஎம் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்தது.
முக்கிய குற்றவாளியை ஆசிப்பை பிடித்த தனிப்படைக்கு டிஜிபி சைலேந்திரபாபு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும், திருவண்ணாமலை 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே, ரூ.20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.15 லட்சம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.