தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காய்ச்சல் ஏற்பட்டால் மாணவர்களை தனிமைப்படுத்த பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் எச்1என்1 என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றன. இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குகிறது. இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 965 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையான காய்ச்சல் இருமல், தும்மலால் பரவுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சமயத்தில், குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை, தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுபோன்ற வைரஸ் காய்ச்சலால் பரவி வருவதால், அதுவும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதால் புதுச்சேரியில் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செப்.25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால், புதுச்சேரி போல இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை. மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் காய்ச்சல் ஏற்பட்டால் மாணவர்களை தனிமைப்படுத்த பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறினார். மேலும், காய்ச்சல், உடல் வலி, தலை வலி இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment