சத்தம் கேக்குது ‘SKY’ வந்துட்டு இருக்காரு…மும்பை அணியில் இணையும் சூர்யகுமார் யாதவ்?

Suryakumar Yadav : டெல்லி அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி 20 கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக  டி20 தொடரில் விளையாடிய போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லண்டனில் ஹெர்னியாவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்தார். பிறகு காயம் குணமடைந்த நிலையில் , பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) கிரிக்கெட் பயிற்சியையும் தொடங்கினார்.

கடந்த சில மாதங்களாக அங்கு அவர் பயிற்சி எடுத்து வந்த நிலையில். சூர்யகுமார் யாதவ், தன்னுடைய உடற்தகுதியை நிரூபித்துள்ளதாகவும், ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் அவர் விளையாட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ வட்டாரத்தில் இருந்த அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சூர்யகுமார் யாதவ் உடற் தகுதி குறித்து பேசியதாவது ” சூர்யகுமார் யாதவ் இப்போது பொருத்தமாக இருக்கிறார். இதற்கு முன்னதாக NCA அவரை சில பயிற்சி ஆட்டங்களை விளையாட வைத்தது. அதில் அவர் மிகவும் அருமையாக விளையாடினார்.  இதன் காரணமாக வரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மும்பை அணியில் இணைய வாய்ப்புள்ளது.

அவர் 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருக்கிறார். வருகின்ற போட்டிகளில்  விளையாடத் தயாராக இருக்கிறார்” என கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நாயகன் மீண்டும் வரார் என கூறி வருகிறார்கள். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பாண்டில் 3 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.  வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி அணியை மும்பை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா இல்லையா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.