இந்த பட்டங்களும் அரசு வேலைவாய்ப்புக்கு தகுதியானதுதான்- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கம்..!

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்களும் அரசு வேலைவாய்ப்புக்கு தகுதியானது என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தில் இருந்து முறையாக பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் அரசு வேலை,பதவி உயர்வுக்கு செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பதவி உயர்வுக்கு செல்லுபடியாகுமா?:

“வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி செந்தில்குமார் 1996 இல் எஸ்எஸ்எல்சி மற்றும் 1998 இல் எச்எஸ்சி தேர்ச்சி பெற்ற ஒரு வழக்கின் தீர்ப்பு தொடர்பான அனைத்து ஊடகங்களிலும் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.அதாவது, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் எம்ஏ பட்டம் 2002-2004 இல் திறந்த பல்கலைக்கழக முறையில் பெற்றார். மனுதாரர் திறந்த பல்கலைக்கழக அமைப்பு மூலம் பெறப்பட்ட முதுகலை பட்டம் அவரது பதவி உயர்வுக்கு செல்லுபடியாகுமா? என்பதை அறிய நீதிமன்ற உத்தரவை கோருகிறார்.

மேல்முறையீடு:

நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் செவ்வாய்க்கிழமை தீர்ப்பை வழங்கியது. அதே சமயம் பதிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஆகியோரின் பிப்ரவரி 2020 உத்தரவை எதிர்த்து ஒரு ரிட் மேல்முறையீட்டை அனுமதித்தது. இது சப் பதிவாளர் தரம்- II இலிருந்து துணை பதிவாளர் தரம் I ஆக பதவி உயர்வு பெறுவதற்கான கல்வித் தகுதி தொடர்பானது.

சுட்டிக்காட்டுதல்:

தீர்ப்பில், மனுதாரர் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பைப் பெறாமல் திறந்த பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். அடிப்படை இளங்கலை பட்டம் இல்லாமல் திறந்த பல்கலைக்கழக அமைப்பில் பெறப்பட்ட முதுகலை பட்டத்தை நியமனம் அல்லது பதவி உயர்வுக்காக கருத முடியாது என்று நீதிபதிகள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை ஒளிபரப்பியது திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பதவி உயர்வு நியமனத்திற்கு செல்லாது என்று பொதுவாக செய்தி வெளியிடப்பட்டது.

செல்லுபடி:

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் பொறுத்த வரையில் G.0 107 இன் படி, திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான முறையில் அதாவது 10+2 க்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பைப் போல செல்லுபடியாகும். G.0.242 படி. தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தில் 10+2+3 உடன்பெற்ற பட்டம் TNPSC மூலம் நியமனம் செய்ய செல்லுபடியாகும்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் அதாவது 10 +2 க்குப் பிறகு பெற்ற பட்டம் மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பைப் போல செல்லுபடியாகும். இத்த செய்தியின் மூலம் மக்களுக்கு திறந்தநிலைக் கல்வி பற்றிய தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 10+2 முடித்து முறையாக பட்டம் படிக்கும்/படித்து முடித்த மாணவர்களுக்கு திறந்தநிலைக் கல்வி மூலம் பெறப்படும் பட்டம் பற்றிய ஐயத்தை நீக்க உதவியாக இருக்கும்”,என்று தெரிவித்துள்ளது.