“தமிழக மாணவர்களின் வாய்ப்பினை பாதிக்கும் விதி…உடனே மாற்றுக” – மத்திய அமைச்சருக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்!

மதுரை:தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பணியாற்ற இந்தி எதற்கு? மாணவர்களின் வாய்ப்பினை பிரசார் பாரதியின் விதியை உடனே மாற்ற வேண்டும் என்று கோரி மத்திய அமைச்சருக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்.

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பணியாற்ற இந்தி எதற்கு? என்றும்,தமிழ்நாடு மாணவர்களின் வாய்ப்பினை பாதிக்கும் பிரசார் பாரதியின் விதியை உடனே மாற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மற்றும் பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அலுவலர் சசி எஸ்.வேம்பதி அவர்களுக்கும்,மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளதாவது:

“பிரசார் பாரதி “இந்தி பிரச்சார பாரதியாய்” தன்னை நினைத்துக் கொள்கிறதா என்று தெரியவில்லை.ஏனெனில்,பல் ஊடக பத்திரிக்கையாளர்” என்ற பதவிக்கான அறிவிக்கை கடந்த 11.01.2022 அன்று வெளியிட்டுள்ளது.ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு,தமிழ்நாட்டில் சென்னை,கோவை,மதுரை,சேலம்,திருச்சி,நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் 8 காலியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.

தூர்தர்சன்,அகில இந்திய வானொலி ஆகியனவற்றிற்கு அவரது பணிகள் பயன்படுத்தப்படும்.அதற்கான தகுதியில் “விரும்பப்படும் கூடுதல் தகுதிகளில்” இந்தி அறிவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால்,அதற்கு என்ன கூடுதல் மதிப்பெண்,முன்னுரிமை என்ற விவரங்கள் இல்லை.

இது இந்தி அறியாத விண்ணப்பதாரர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.தாங்கள் கழித்துக் கட்டப்படுவதற்கு இது காரணம் ஆக்கப்படுமோ என்று,போட்டியில் தங்களுக்கு தடைக் கல்லாக மாறுமோ என்று,நமக்கும் புரியவில்லை ஏன் இந்தி உள்ளே நுழைகிறது என்று விண்ணப்பதாரர்களின் மனதில் உண்மையான அச்சங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த அறிவிக்கையில் இட ஒதுக்கீடு பற்றிய குறிப்புகளும் இல்லை.இந்த பதவி புதிதானதா? இந்த பதவியில் மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எவ்வளவு? அந்த எண்ணிக்கை இட ஒதுக்கீடுக்கான வரம்பிற்குள் வருகிறதா இல்லையா?,

மேலும்,விரும்பத்தக்க தகுதியில் இருந்து ஹிந்தியைக் கைவிடவும், பதவிக்கான குறைந்தபட்ச அளவுகோல்களை விட கேடர் வலிமை அதிகமாக இருந்தால்,ஆட்சேர்ப்பில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்யவும் பிரசார் பாரதியிடம் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.விரைவில் நேர்மறையாக பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன்”,என்று கேட்டுக் கொண்டுள்ளார்.