சூப்பர் மார்க்கெட்டில் சீறிப்பாய்ந்த ராக்கெட்.. 51 பேர் உயிரிழப்பு..!

உக்ரைனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகியுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில்  கார்கிவ் பகுதியில் உள்ள ஹ்ரோசா கிராமத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஆறு வயது சிறுவனும் ஒருவர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 19 மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பிறகு கார்கிவ்வில்  நடந்த மிக மோசமான தாக்குதல் இது என்று கார்கிவ் இராணுவ  செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்த்துள்ளார்.

இந்நிலையில் அதிபர் ஜெலென்ஸ்கி  தனது சமூக வலைத்தளத்தில் “ரஷ்ய ஏவுகணை கார்கிவ்  பகுதியில் குபியன்ஸ்க் மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தாக்கியது. இது முழுக்க முழுக்க திட்டமிட்ட,கொடூரமான பயங்கரவாத தாக்குதல். தற்போதைய நிலவரப்படி, 51க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை  இழந்து வாடும் அனைவருக்கும் எனது அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவுக்கு உதவுபவர்கள் மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து ஆதரிப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள்.

உயிரைப் பாதுகாப்பதில் எங்களுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொரு தலைவருக்கும் நன்றி.  மேலும் நாங்கள் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

 

author avatar
murugan