கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு.! 250 பக்க விசாரணை அறிக்கை தாக்கல்.!

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு தொடர்பாக 250 பக்க விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை அடையாறில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கலை கல்லூரியில் பரதநாட்டியம், இசை உள்ளிட்ட கலைகள் பற்றிய பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அங்கு பேராசிரியர்கள் ஹரி பத்மன், ஸ்ரீநாத், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலியல் புகார் தொடர்பான மாணவிகளின் இந்த போராட்டம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, மகளிர் ஆணையம் பரிந்துரை பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவிகள் கூறிய பாலியல் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை விவரங்களை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகாரின் பெயரில் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் புகார் தொடர்பாக அங்கு பயிலும் மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து, சென்னை சைதைபேட்டை நீதிமன்றத்தில் மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் 250 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு இருந்த ஹரி பத்மன் நிபந்தனையின் பெயரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.