தானியங்கி இயந்திரத்தில் பணம்;கிடைக்கும் மஞ்சப்பை – இன்று தொடங்கும் திட்டம்!

தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டம் இன்று தொடக்கம்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மக்காத 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் கடை மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்றோரு புறம் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிம்பர் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.இதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வரின் மஞ்சப்பை திட்டம் குறித்து பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில்,தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், மஞ்சப்பை விற்பனை இயந்திரம் பெறும் ஒப்பந்தம் இறுதியாகி விட்டது. சந்தை,பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் வைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.முதற்கட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முதல் இயந்திரம் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பொது இடங்களில் மலிவு விலையில் துணி பைகள் கிடைப்பது சவாலாக உள்ளது எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில்,தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சப்பை பெறும் திட்டத்தை சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ இன்று தொடங்கி வைக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ்,மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் ரூ.10 நாணயத்தை செலுத்தினால்,மீண்டும் மஞ்சள் பை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணிப் பை வரும் என்றும் அந்த இயந்திரத்தில் 40 பைகள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும்,மஞ்சப்பை தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சிலருடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment