குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்க்கு மன நல பாதிப்பு இல்லை..!

செஞ்சி அருகே ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசிக்கு மனநலத்தில் பாதிப்பு ஏதுமில்லை என்பது தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரில் வசித்து வரும் தம்பதி துளசி-வடிவழகன். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசிக்கு ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால், கணவன் சித்தூருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், துளசியின் செல்பேசியை பார்த்துள்ளார்.

அதில் அவருடைய ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இருந்துள்ளது. இதனை பார்த்த வடிவழகன் காவல்துறையில் மனைவி துளசி மீது புகார் அளித்துள்ளார். மேலும், இந்த குழந்தையை அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இதன் பின்னர், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையின் உத்தரவால், ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்த துளசியை சிறப்பு தனிப்படை காவல்துறையினர் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஒன்றரை வயது குழந்தையை இவ்வளவு கொடூரமாக தாக்கிய துளசி மனநலம் பாதிக்கப்பட்டாரா..? என பரிசோதனை செய்ய விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பரிசோதனையில் துளசிக்கு மனநலத்தில் பாதிப்பு ஏதுமில்லை என்பது தெரியவந்துள்ளது.

துளசியின் மனநலத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர் பாரதி சான்று வழங்கியுள்ளார். துளசியை பரிசோதனை செய்து அவரிடம் கேட்ட சில கேள்விகளுக்கு சரியான பதில்களை அளித்தார். குழந்தையை தாக்கியது தொடர்பாக வருந்துகிறீர்களா என கேட்டதற்கு வருந்துவதாக துளசி தெரிவித்தார்.

author avatar
murugan