திரௌபதி அம்மன் கோவில் திறந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

திரௌபதி அம்மன் கோவில் திறந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கோவிலை திறக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. 

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் ஒரு பிரிவினரை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என மற்றொரு பிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

பேசுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாச்சியர் சீல் வைத்தார்.

இதனை எதிர்த்து கோவிலை திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அருகில் உள்ள கிராமத்தினை சேர்ந்த நபர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில், கொரோனா காலத்தில் கூட கோவிலில் பூஜை செய்யப்பட்டது. தற்போது பக்தர்களை அனுமதிக்காமலாவது கோவிலில் பூஜை மட்டும் செய்வதற்காக மட்டுமாவது திரௌபதி அம்மன் கோவிலை திறக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், இந்த கோவிலை திறந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என வாதிடப்பட்டது. இதனை ஏற்று, இரு தரப்பினர் இடையே பிரச்சனை நிலவுவதால் கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தற்போது அதிகாரிகளால் விசாரணை நடைபெற்று வருவதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆதலால் இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்குமாறு உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.