25 % ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

25 % ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டத்தை இயற்றியது. அது, 2010 ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டிற்கு வந்தது.

தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 % இடங்களை பொருளாதாரத்தில் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 % ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்பட வில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குகிற மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இணைய வழி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் மாணவர்கள் சேர்க்கை காலதாமதமாவதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு பள்ளிகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதற்கான நிலை ஏற்பட்டு இருக்கிறது.எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 % ஒதுக்கீட்டுக்கான நடைமுறைகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.