காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் விபரங்களை அறிய ஓர் புதிய ஏற்பாடு-சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 3 சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் விபரங்களை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில்,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது,நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளுக்கும் சம அளவில் காய்கறிகள்  கொண்டு செல்ல வேண்டும்.மேலும்,குறைந்த விலையில் நிறைந்த சேவை செய்திட வேண்டும் என்று முதல்வர் அறிவுரைவழங்கினார்.

அதன்படி,நேற்று 13 ஆயிரத்து 96 வாகனங்கள் மூலம் கிட்டத்தட்ட 6,500 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.குறிப்பாக சென்னையில்,நேற்று ஒரே நாளில் 1,236 வாகனங்கள் மூலம்,1,500 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில்,சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 3 சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் விபரங்களை  http://chennaicorporation.gov.in என்ற  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும்,இதன்மூலம், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வாகனங்கள் மூலம் காய்கறி,பழங்களை விற்பனை செய்பவர்களை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.