#Shocking:பெரும் வெள்ளம்:சுமார் 341 பேர் பலி & இடிந்த வீடுகள் மற்றும் பள்ளிகள்!

தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் பெய்து வரும் தொடர் மழையால் டர்பன் நகரம் உட்பட கிழக்கு குவாசுலு-நடால் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை சுமார் 341 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும்,ஏராளமான மக்கள் காணாமல் போனதால் இறப்பு எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இடிந்த வீடுகள் – மின்சாரம் துண்டிப்பு:

மேலும்,கனமழை மற்றும் வெள்ளத்தால் வீடுகள் மற்றும் பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்,டர்பன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெருநகரப் பகுதிக்கு ஏற்பட்ட சேதம் 52 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று எதெக்வினி மேயர் சோலோசி கவுண்டா தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கிய பள்ளிகள் – மாணவர்கள் பலி:

அதுமட்டுமல்லாமல்,குறைந்தபட்சம் 120 பள்ளிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன,இதனால் 26 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 18 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்று கல்வி அமைச்சர் ஆங்கி மோட்சேக்க (Angie Motshekga) தெரிவித்துள்ளார்.

தேசிய பேரிடர்:

இதனைத் தொடர்ந்து,தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி சிரில் ரமபோசா, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டி,சேதங்களை சரி செய்ய நிதியை விடுவிக்க முடிவு செய்துள்ளார்.அதன்பின்னர்,பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

வெள்ளத்தில் முதலைகள்:

இதற்கிடையில்,டர்பனின் வடக்கே டோங்காட் பகுதியில் உள்ள பண்ணையில் இருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 14 முதலைகள்  மீட்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தென்னாப்பிரிக்காவில் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.