காயமடைந்து தையல் போட மறுத்த சிறுவனுக்கு வலிநிவாரணியாக மாறிய விஜய் நடித்த “பிகில்” படம்..!

சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் தையல் போடுவதற்கு மறுத்ததால் விஜய் நடித்த பிகில் படம் வலிநிவாரணியாக மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த சிறுவன் ஷிவர்ஷன். இவனுடைய வயது 10.  இந்த சிறுவன் கடந்த 6 ஆம் தேதியன்று பற்றுலா சாலை வழியாக தனது உறவினர் அரவிந்தனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தூக்க கலக்கத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஷிவர்ஷன் திடீரென கீழே விழ மூக்கு மற்றும் நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரத்தம் வர தொடங்கியதால் அவனை அழைத்துக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் நெற்றி மற்றும் மூக்கின் அடிப்பகுதியில் தையல் போடவேண்டியிருந்ததால் அப்போது பணியில் இருந்த மருத்துவர் சந்திரசேகர் தையல் போடுவதற்கு முயன்றுள்ளார். ஆனால், மருத்துவர்களின் முயற்சிக்கு அச்சிறுவன் ஒத்துழைக்காமல் அழுதபடியே இருந்துள்ளான்.

இதன் பின்னர் அந்த சிறுவனிடம் தன்னார்வலர் ஒருவர் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்துள்ளார். உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்க துவங்கியவுடன், எனக்கு நடிகர் விஜய் புடிக்கும் என்றும் அவர் நடித்த பிகில் படம் அதில் எனக்கு மிகவும் பிடித்தது என்றும் கூறியுள்ளான். மேலும், காயத்தை கூட பொருட்படுத்தாமல் அச்சிறுவன் விஜய் நடித்த பாடல்கள், வசனங்கள் எல்லாம் எனக்கு அப்படியே தெரியும் என கூறியுள்ளான்.

இதனை பார்த்த பின்பு மருத்துவர்கள் செல்போனில் வைத்திருந்த பிகில் படத்தை அச்சிறுவனுக்கு காண்பித்துள்ளனர். அதை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு மயக்க ஊசி போட்டு, 15 நிமிடத்தில் 7 தையல்களை போட்டுள்ளனர். மருத்துவர்கள் பலமுறை முயன்றும் ஒப்புக்கொள்ளாத சிறுவன் பிகில் படத்தை பார்த்து வலியை மறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.