“இந்தியாவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்” – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி ..!

இந்தியாவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர்  மூலம் உலகம் முழுவதும் 10 நாடுகளில் 1,571 முக்கியப் பிரமுகர்களின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டு, முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன. அந்த வகையில்,இந்தியாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசி ஹேக் செய்யப் பட்டுள்ளதாகவும்,அவ்வாறு ஹேக் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் பலர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிலும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் பிரஹ்லாத் படேல், பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,இது குறித்து சிதம்பரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசியதாவது:

“இந்தியாவின் குடியரசிற்கும்,நாட்டின் பாதுகாப்பிற்கும் நாம் இதுவரை எதிர்பார்த்திராத அளவில் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.இதனை பிஜேபி (மோடி) அரசாங்கம் மூடி மறைக்கிறது.இதனால்,உடனடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.பெகாசஸ் வைரஸ் குறித்து பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.