5வது நாளாக போர் தீவிரம்! ஆயுதங்களுடன் இஸ்ரேலில் களமிறங்கிய அமெரிக்க விமானம்!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் 5வது நாளாக இன்றும் தீவிரமடைந்து உள்ளது. கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதியில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பாலஸ்தீனத்தின் காசா எல்லை பகுதியில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன.  அதுமட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கான ஹமாஸ் அமைப்பை சேர்த்தவர்கள், அதிநவீன படகுகள், பாரா கிளைடர் மூலம் இஸ்ரேலின் தென் பகுதியில் நுழைந்து பல மணி நேரம் தாக்குதல் நடத்தினர்.

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த போரானது தொடர்ந்து இன்றும் 5வது நாளாக நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பின் தலைமையகமான காசா நகரில், அவர்கள் பதுங்கியிருக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று, இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த தாக்குதலில் 2000 மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 1200 பேர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 900 க்கும் அதிகமானோர் பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், தாக்குதலால் மக்கள் பதுங்கு குழியில் தஞ்சமடைந்து உள்ளனர்.

இந்த சமயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதில், ஹமாஸ் படைகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு கண்டனத்தை தெரிவித்தனர். மக்களை பாதுகாக்கும் இஸ்ரேலின் முயற்சிகளுக்கு எங்கள் நாடுகள் துணை நிற்கும்.  பாலஸ்தீனிய மக்களின் நியாயமான கோரிக்கைகளை நாங்கள் அனைவரும் ஆதரிக்கிறோம்.

மேலும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சமமான நீதி மற்றும் சுதந்திரம் கிடைக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், ஹமாஸ் அமைப்பு அப்படி எந்த பாலஸ்தீன மக்களின் கோரிக்கைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் படை இடையேயான போரில் இஸ்ரேலுக்கு உதவ ஆயுதங்களுடன் அமெரிக்க விமானம் இஸ்ரேலுக்கு வந்துள்ளது.

ஆயுதங்களுடன் அமெரிக்க போர் விமானம் இஸ்ரேலின் விமான படை தளத்திற்கு வந்தடைந்தது. அதன்படி, தெற்கு இஸ்ரேல் பகுதியான நெவாட்டிம் விமான படை தளத்தில் ஆயுதங்களுடன் தரையிறங்கியது அமெரிக்க விமானம். இதனால் மேலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக ஹமாஸ் அமைப்பினர் போர் பிரகடனம் எடுத்துள்ளனர்.

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே இதுவரை நான்கு முறை போர் நடந்துள்ளது. இது தற்போதும் வெடித்துள்ளது, “ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்” என்ற பெயரில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோன்று, “operation iron sword” என்ற பெயரில் ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருக்கும் இடங்களில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்