“ரூ.10 லட்சத்தை கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்”- என்.சங்கரய்யா- யார் இவர்..?

தகைசால் தமிழர் விருதுக்காக தனக்கு அறிவித்த ரூ.10 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக என்.சங்கரய்யா அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்குவார் என தமிழக அரசு அறிவித்தது.

தகைசால் தமிழர் விருது: 

இதனையடுத்து,தமிழக அரசு புதியதாக உருவாக்கிய தகைசால் தமிழர் விருது முதலாவதாக,தமிழுக்கும்,தமிழக வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய  சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி,என்.சங்கரய்யா அவர்களுக்கு வரும் சுதந்திர தினத்தன்று 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுவதாக இன்று காலை தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில்,தகைசால் தமிழர் விருது அறிவித்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு,என்.சங்கரய்யா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

முதலமைச்சருக்கு நன்றி:

எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு,எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா நிதி:

இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சம் தொகையினை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதி மூச்சு:

மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும்,இந்திய நாட்டின் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன். சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

என்.சங்கரய்யா – யார் இவர்?:

என்.சங்கரய்யா அவர்கள் நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15 ஆவது‍ மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார்.

தொடக்க காலம்:

என்.சங்கரய்யா அவர்கள் ஜூலை 15, 1922 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிறந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

என்.சங்கரய்யா அவர்கள் இடைநிலை படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ஆம் ஆண்டில் சேர்ந்து,வரலாறு‍ பாடத்தை பிரதான பாடமாக தேர்வு செய்தார்.பின்னர்,அமெரிக்கன் கல்லூரியின் பரிமேலழகர் தமிழ்க்கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதுரை மாணவர் சங்கம்:

1938 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் (Madras Student Organization) அமைக்கப்பட்டு‍ மாணவர்கள் சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு‍ வந்தனர். இதேபோல் மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கைது:

அந்த நேரத்தில்,ராஜாஜி தமிழக முதல்வராக இருந்தபோது இந்தி மொழியை எதிர்க்கும் வகையில்,அவருக்கு  எதிராக கருப்புகொடி காட்டியதற்காக முதன்முதலில் என்.சங்கரய்யா கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து,தமிழ் மொழி உரிமை, மொழி வளர்ச்சி, மொழிவாரி மாநிலம் அமைதல், விவசாயிகள் நலனை பாதுகாப்பதற்காக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு என்.சங்கரய்யா அவர்கள் தலைமை வகித்தார்.

மேலும்,இவர் தனது மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார். இதனால், போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் பல போராட்டங்களில் பங்கேற்றார்.

நேதாஜி :

இவர் தனது கல்லூரி பருவத்தில் சுதந்திர போராட்டத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஸ் சந்திர போசை அழைத்து வந்து மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி விடுதலைக்கான விதையை விதைத்தார்.மேலும்,அதற்கு பரிசாக பெற்றது, பி.ஏ.இறுதி தேர்வுக்கு 15 நாட்கள் முன்பாக சிறைவாசம் பெற்றார்.

பொதுவுடைமை இயக்கத்தில்:

1940 ஆம் ஆண்டு‍ ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டபோது இருந்த 9 பேர் உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.

தேர்தலில் பங்கேற்பு :

1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் இவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இருப்பினும்,1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.இதனைத் தொடர்ந்து,இவர் 1977 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும்,1964 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவாக்கப்பட்டதில்,மூலகாரணமாக இருந்த 32 பேரில் தோழர் சங்கரய்யாவும் ஒருவர்.மேலும்,சுதந்திர போராட்ட வீரரான கக்கன் அய்யாவுடன் நட்பு கொண்டவர் இவர்.

மத்தியக் குழு:

1986 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12 வது மாநாட்டில் கட்சியின் இவர் மத்தியக் குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டார்.அப்போதிருந்தே தொடர்ந்து கட்சியின் மத்தியக் குழுவில் இருந்து வருகிறார். 1995இல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என். சங்கரய்யா கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார்.

விவசாய சங்கத்தின் தலைவர்:

1982 முதல் 1991 முடிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டார். 1969 ஆண்டில் மீண்டும் மாநிலத் தலைவராக தேர்வானார்.

மாநில செயலாளர்:

1995 ஆம் ஆண்டு கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என். சங்கரய்யா கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.2002ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார்.

இவ்வாறு,80 ஆண்டுகளுக்கும் மேலான தனது பொதுவாழ்வில் சங்கரய்யா ஏராளமான சீர்த்திருத்த திருமணங்களை நடத்தி வைத்தது மட்டுமல்லாமல், தன் குடும்பத்திலும் சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி முன்னுதாரணமாக இருந்துள்ளார்.

இதழ் ஆசிரியர்:

பிரபல ஜனசக்தி இதழின் முதல் பொறுப்பாசிரியரும், தீக்கதிர் இதழின் முதல் ஆசிரியருமாக என்.சங்கரய்யா இருந்தார்.

சமீபத்தில்தான்,அவர் தனது 100 வது பிறந்த நாளை கொண்டாடினார்.அரசியல் தலைவர்கள் பலரும் சங்கரய்யா அவர்களுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.