தெலுங்கானா தேர்தல் : அனல் பரந்த இறுதிக்கட்ட பிரச்சாரம்.! நாளை மறுநாள் மக்கள் தீர்ப்பு.!

இம்மாதம் அறிவிக்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதம் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுநாள் நவம்பர் 30இல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119  தொகுதியில் 98 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சியை பிடித்து இருந்தது பாரதிய ராஷ்டிரிய கட்சி (பிஆர்எஸ்). கடந்த 2 முறையும் சந்திரசேகர ராவ் தெலுங்கானா முதல்வராக உள்ளார்.

காங்கிரஸ், பிஆர்எஸ் இடையே ரகசிய புரிதல்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்றுடன் தெலுங்கானாவில் தனது பிரச்சாரத்தை முடித்து கொண்டு நேற்று திருப்பதி கோயிலில் தரிசனம் செய்தார்.

இன்று, ஹைதராபாத், ஆனந்த் பாக் சௌரஸ்தாவில் இருந்து மல்காஜ்கிரி சௌரஸ்தா வரை சாலை மார்க்கமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி , ப்ரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் என முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி பேசுகையில்,”உங்களுடனான எனது உறவு அரசியல் உறவு அல்ல. இது குடும்ப உறவு. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டோம். அந்த யாத்திரையில் நாங்கள் பார்த்த வெறுப்பு , வன்முறை நிறைந்த இந்தியாவை நாங்கள் விரும்பவில்லை. அன்பான இந்தியாவை தான் நாங்கள் விரும்புகிறோம். அன்பினால் ஒரு தேசம் உருவாக போகிறது. ” என பேசினார்.

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி வத்ரா பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், ‘பத்தாண்டுகளாக தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் பி.ஆர்.எஸ். அரசு ஆட்சியில் உள்ளது. உங்களுக்கு வேண்டிய வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டதா?  பெண்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டதா? கே.சி.ஆர் தனது குடும்ப உறுப்பினர்களை அமைச்சர்களாக்கினார். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் எங்கள் ஆறு உத்தரவாதங்களை உடனடியாக நிறைவேற்றுவோம். தெலுங்கானாவில்  நேர்மையான ஆட்சியை அமைப்போம் என்றும் பிரியங்கா காந்தி பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

ஆளும் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கே.கவிதா நிஜாமாபாத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அதில், “நாங்கள் அடுத்த ஒரு நூற்றாண்டை இலக்காக நிர்ணயித்துள்ளோம்.  நாங்கள் எங்கு சென்றாலும் மக்கள் வரவேற்பு நன்றாக உள்ளது. நாங்கள் நல்ல பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

நாங்கள் எப்போதும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களை சந்தித்து வருகிறோம். ராகுல் காந்திக்கு இது புதிது. எனவே, அவர் சந்திக்க தான் வேண்டும். அவர் ஒரு இளவரசன், நாங்கள் சாமானியர்கள். காங்கிரஸ் இதை இப்போதுதான் கற்றுக் கொள்கிறது எனவும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கவிதா குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.