தமிழ் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு – இரங்கல் தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள்.!

தமிழ் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு அரசியல் தலைவர்களான கமல்ஹாசன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ் பதிப்புத் துறையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்

மரண படுக்கையிலும் சுவாச கருவி பொருத்தியவாறு அவர் தனது க்ரியா அகராதியின் திருத்தப்பட்ட 3-ம் பதிப்பினை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகரும் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் தற்கால தமிழகராதி உள்ளிட்ட பல்வேறு நூல்களை பதிப்பித்து , தமிழ் பதிப்புலக வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் இயற்கை எய்தி விட்டார். தமிழிருக்கும் வரை அவர் புகழ் இருக்கும் என்று கூறி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அமமுக பொது செயலாளரான டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ் பதிப்புலகில் தனித்துவமான ஆளுமையாக திகழ்ந்த ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

நவீன யுகத்திற்கு ஏற்ப தமிழுக்கான சொற்களைத் தேடித்தேடி சேகரித்து அவர் வெளியிட்ட அகராதிகளும், மேற்கொண்ட தமிழ்ப்பணிகளும் எப்போதும் மறையாதவை. ராமகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Leave a Comment