ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்! தமிழக முதல்வர் இரங்கல்!

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களுக்கு தமிழக முதல்வர் இரங்கல்.

ரஷ்யாவின் வோல்காகிராட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த  மாணவர்கள் படித்துவருகின்றனர்.  இந்நிலையில், அங்குள்ள வால்கா நதிக்கரைக்கு 10-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சென்று குளித்துள்ளனர். அப்போது, ஒரு மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சக தமிழக மாணவர்கள், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேலும் மூன்று மாணவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த  சம்பவத்தில், உயிரிழந்தவர்கள், சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த மனோஜ் என தெரியவந்துள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகள், 4 பேரின் உடலை விரைவாக தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளோடு தொடர்புக் கொண்டு, உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அந்த உத்தரவின் பேரில், தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளையும் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள்மேற்கொண்டு வருகின்றனர்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.