விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் தமிழ்நாடு: பிரதமர் மோடி பெருமிதம்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டு தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்த நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில் அமைக்கப்பட்ட கேலோ இந்தியா துவக்க விழா அரங்கம்  உதய சூரியன் வடிவில் இருந்தது.

துவக்க விழா மேடையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  விழா மேடைக்கு இருந்தனர்.
பிரதமர் மோடிக்கு கேலோ இந்தியா போட்டியின் முத்திரையை பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி ‘வணக்கம் சென்னை’ என தமிழில் தனது உரையை தொடங்கினார், “தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பும், விருந்தோம்பலும் சொந்த ஊருக்கு வந்ததை போல இருக்கிறது, விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக இருக்கிறேன்.

2024ம் ஆண்டு விளையாட்டு துறைக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழியின் கலாச்சாரம் உங்களுக்கு உங்களின் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும், விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவை தலைசிறந்த நாடாக காண விரும்புகிறோம். இளைய இந்தியாவே புதிய இந்தியா, 2014ஆம் ஆண்டிற்கு பிறகு விளையாட்டில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது, தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக்குவதே இலக்கு ” என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சற்று முன்னர் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி, சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார்.