திருக்குறள் குறித்து பிரதமர் கூறியதால் தமிழுக்கே பெருமை- முதல்வர் பழனிச்சாமி!

பிரதமர் மோடி, திருக்குறள் குறித்து கூறியதால், தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, இன்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர் திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷம் என தெரிவித்த அவர், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. என தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறதாகவும் அந்த பதிவில் அவர் தெரிவித்தார். இந்தநிலையில் பிரதமர் மோடி, திருக்குறள் குறித்து கூறியதால், தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, “உலகப் பொதுமறையாம் திருக்குறள் ஒரு நீதி நூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றது.‌ இனம், மொழி, நாடு போன்ற எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வினை நெறிப்படுத்தும் உயரிய நூலாகும்.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில்,தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும்.” எனவும், 

“இத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும்” என அந்த பதிவில் தெவித்தார்.