சண்டே ஸ்பெஷல்!.. சேமியா பிரியாணி செய்யலாமா..?

பிரியாணி என்றாலே சீரக சம்பா பிரியாணி ,பாஸ்மதிஅரிசி   பிரியாணிகளை தாம்   நாம் ருசித்திருப்போம் . ஆனால் இன்று சேமியாவை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்றும் சேமியா குலையாமல் தனித்தனியாக வர என்ன செய்வது என்றும்  இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • சேமியா =1 பாக்கெட்
  • சிக்கன்=150 g
  • பெரிய வெங்காயம் =2
  • தக்காளி =2
  • பச்சை மிளகாய் =3
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் =3/4 ஸ்பூன்
  • பட்டை =1 இன்ச்
  • பிரியாணி இலை =1
  • கிராம்பு =2,ஏலக்காய் 2
  • மஞ்சள் தூள் =கால் ஸ்பூன்
  • மிளகாய் தூள் =1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா =1 ஸ்பூன்
  • கொத்தமல்லி புதினா =சிறிதளவு
  • தயிர் =50 ml
  • நெய் =2 ஸ்பூன்
  • எண்ணெய் =4 ஸ்பூன்
  • உப்பு தேவையானவை

செய்முறை

முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை சேர்த்து அதிலே ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து 70% வேகவிடவும். பிறகு அதை தனியாக எடுத்து ஆற வைக்கவும், இப்படி வேக வைத்து ஆற வைத்தால்தான் சேமியா குலையாமலும் உதிரி உதிரியாகவும் வரும் .

ஒரு பாத்திரத்தில் எண்ணெய்  சேர்த்து பட்டை, கிராம்பு ,ஏலக்காய், பிரியாணி இலை இவைகளையும் சேர்த்து தாளிக்கவும். பிறகு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கவும். வதங்கிய பிறகு புதினாவும் கொத்தமல்லியும் சேர்த்து நன்கு கிளறவும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், கரம் மசாலா ,உப்பு  சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு தயிரையும் சேர்க்கவும். பின்பு எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வேக வைக்கவும் .சிக்கன் வெந்த பிறகு சேமியாவை சேர்த்து பட்டும்  படாமல் கிளறி விட்டு , நெய் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வைக்கவும். 5 நிமிடம் கழித்து   கிளறி இறக்கினால் சுவையான கம கம வென சேமியா பிரியாணி ரெடி.

சேமியா உப்புமா என்றாலே ஒரு சிலருக்கு பிடிக்காது ஆகவே சேமியாவை வைத்து இந்த முறையில் பிரியாணி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இந்த சண்டேக்கு   சேமியா பிரியாணி செய்து அசத்துங்கள்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment