தற்கொலை செய்வதற்கு இயந்திரமா..! அனுமதி அளித்த ஸ்விட்சர்லாந்து!

தற்கொலை செய்வதற்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயந்திரத்திற்கு ஸ்விட்சர்லாந்து அனுமதி அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கருணைக்கொலை ஆர்வலர் டாக்டர் பிலிப் நிட்சே அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். சார்கோ கேப்சூல் என அழைக்கப்படக் கூடிய இந்த தற்கொலை இயந்திரத்தின் 3டி பிரிண்ட்டிங் இயந்திரத்தை எக்சிட் இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த இயந்திரம் சவப்பெட்டி போன்ற மாடலில் இருக்கும். எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி செல்ல எளிதாக உள்ள இந்த தற்கொலை இயந்திரத்தில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் உள்ளே சென்று படுத்துக் கொள்ள வேண்டுமாம். அதன்பின் அந்த இயந்திரம் கேட்கக்கூடிய இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்து அந்த இயந்திரத்தில் இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும். அவ்வளவுதான் சில நொடிகளிலேயே வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

அதாவது இயந்திரத்தின் கேள்விகளுக்கு பதிலளித்த சில வினாடிகளிலேயே இயந்திரத்தின் உட்புறத்தில் இருந்து நைட்ரஜன் வெளியாகும். அதன்பின் ஆக்சிஜனின் அளவு 20 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைந்து விடும். இதனால் உள்ளே இருப்பவர்கள் உடனடியாக சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்று விடுவார்களாம். இவை அனைத்தும் வெறும் 30 விநாடிகளில் நடக்கும்.

அடுத்த 5 நிமிடத்தில் சுயநினைவை இழந்த நபர் உயிரிழந்து விடுவார் என கூறப்படுகிறது. இந்த இயந்திரத்திற்கு தற்பொழுது சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு காரணம் கடந்த 2020ஆம் ஆண்டு 1,300 பேர் தற்கொலை செய்து கொண்டது தான் என கூறப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டு முதல் இந்த இயந்திரம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என கூற வேண்டிய இடத்தில் தற்கொலை செய்துகொள்வதற்கான இயந்திரத்திற்கு அனுமதியை சுவிட்சர்லாந்து அரசு வழங்கியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal