36 மணி நேரத்திற்கு முன்… ரத்தக்கறை..!  4 வயது சிறுவன் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்.!  

பெங்களூருவை சேர்ந்த தனியார் IT நிறுவனத்தின்  CEO சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த அவர், பின்னர் அங்கிருந்து கடந்த ஞாயிறு நள்ளிரவில் கார் மூலம் பெங்களூரு புறப்பட்டார்.

விடுதிக்கு வரும்போது இருந்த 4 வயது மகன், திரும்பி செல்லும் போது இல்லை, தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை ஆகியவற்றை கொண்டு விடுதி நிர்வாகம் சார்பில் கோவா போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது. பின்னர் கார் ஓட்டுனரை தொடர்பு கொண்டு சுசானா சேத்தை கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா எனுமிடத்தில் கர்நாடக போலீஸ் மூலம் கோவா போலீசார் கைது செய்தனர்.

4 வயது மகனை கொன்ற பெண் CEO.? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…

சுசானா சேத் கொண்டு வந்த சூட்கேசில் 4 வயது மகனின் உடலை போலீசார் கைப்பற்றி, சித்ரதுர்கா பகுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், சுசானா சேத்தை கோவா போலீசார்  கைது செய்து நேற்று முன்தினம் இரவு கோவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  4 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை விவரங்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை செய்த டாக்டர் குமார் நாயக் கூறுகையில், சிறுவன் 36 மணி நேரத்திற்கு முன்பே உயிரிழந்ததாக கூறியுள்ளர். அதாவது சுசனா சேத் திங்கள் அன்று கைதாவதற்கு 36 மணிநேரம் முன்னதாக சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் கழுத்து நெரிக்கப்பட்டோ, அல்லது மூச்சு திணறல் ஏற்படுத்த வைத்தோ சிறுவன் உயிர் பிரிந்துள்ளது.  சில தசைகளின் செயல்பாட்டை வைத்து 36 மணிநேரத்திற்குள் உயிரிழந்து இருந்தால், சரியான நேரத்தை உடனடியாக கண்டறிய முடியும். ஆனால் தற்போது அது  சற்று கடுமையாக இருப்பதால் நிச்சயமாக சிறுவன் உயிரிழந்து 36 மணிநேரத்திற்கு மேலாகிவிட்டது. என மருத்துவர் குமா நாயக் கூறியதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.  ஹோட்டல் அறையில் சில ரத்த கறைகள் இருந்ததாக ஊழியர்கள் கூறியிருந்த நிலையில், சிறுவனின் உடலில் இரத்த காயங்கள் எதுவும் இல்லை என மருத்துவர் குமார் நாயக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில், இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்ட ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், தனியார் விடுதியில் இருந்து தலையணையை பயன்படுத்தி சுசானா சேத் கொலை செய்து இருக்கலாம் என்றும், சம்பவ இடத்தில் ஒரு கத்தரிக்கோல் இருந்ததும். அதன் மூலம் சுசானா சேத் தனது மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு பின்னர் தான் அது சுசானா சேத் ரத்தம் தானா அல்லது வேறு யாருடைய ரத்தமா என்பது தெரிய வரும் எனவும் காவல்த்துறை அதிகாரி கூறியதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.