“ULPIN எண்ணை ஏற்றுக்கொள்ள மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்” – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

டெல்லி:தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பதிவுகளை நிர்வகிப்பதற்கு வசதியாக,தனித்த நிலப் பார்சல் அடையாள எண்ணை (ULPIN) ஏற்றுக்கொள்ள மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையைதாக்கல் செய்தார்.அப்போது,அவர் தனது உரையில்,தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பதிவுகளை நிர்வகிப்பதற்கு வசதியாக,தனித்த நிலப் பார்சல் அடையாள எண்ணை (ULPIN) ஏற்றுக்கொள்ள மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்று கூறினார்.

மேலும்,நிலப் பதிவேடுகளை எழுத்துப்பெயர்ப்பு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது கூறினார்.நிலப் பார்சல் அடையாள எண் (ULPIN) என்பது 14 இலக்க அடையாள எண்ணாகும்.இது நாட்டில் உள்ள ஒவ்வொரு நிலத்திற்கும் வழங்கப்படுகிறது. அதாவது,ULPIN ஆனது “நிலத்திற்கான ஆதார்” என விவரிக்கப்படுகிறது.இது நில மோசடியைத் தடுக்க உதவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,நில சீர்த்திருத்தத்தின் ஒரு பகுதியாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள தேசிய பொதுவான ஆவணப் பதிவு அமைப்புடன் (என்ஜிடிஆர்எஸ்) ஒரே நாடு,ஒரே பதிவு என்ற நடைமுறை  கொண்டு வரப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.இதற்காக நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

என்ஜிடிஆர்எஸ் (NGDRS) என்பது இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் பதிவுத் துறைகளுக்காக உருவாக்கப்பட்ட  மென்பொருள் ஆகும்.இது சொத்து மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதற்கான பொதுவான தளம்.இது நில வளங்கள் துறை, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

author avatar
Castro Murugan