#BreakingNews : ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம் – வெளியான அறிவிப்பு

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த கட்சியிலும் சேரலாம் என்று  ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஏற்பட்ட இரத்தம் அழுத்தம் காரணமாக அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார். இதைத்தொடர்ந்து, ரஜினி அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதில், தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்தார். இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில், தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக தங்களது கட்சிக்கு ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.இதன் விளைவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்,நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குஉள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர்  ஏ.ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலாளர்  ஆர்.கணேசன் மற்றும் தலைமைக்குழு தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன் ,இராமநாதபுரம் மாவட்ட இணைச்செயலாளர்  ஏ.செந்தில்வேல், இராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் திரு. எஸ்.முருகானந்தம் ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் வேறு கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ராஜினாமா செய்துவிட்டு விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் வேறு கட்சியில் இணைந்தாலும் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.