121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு.! கேப்டன் விஜயகாந்த் கண்டனம்.!

தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்கும் இலங்கையின் உத்தரவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் நேற்றைய தினம் உத்திரவிட்டிருந்தது . ஏனெனில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகால் கடல் மாசுபடும் என்பதால் அதனை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 121  படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க வழங்கிய இந்த தீர்ப்பு சரியானது அல்ல .  மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று.

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த இது வழிவகை செய்யும். மேலும் படகுகளை நம்பி வாழக்கூடிய மீனவர்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும் . இது இரு நாட்டுடைய நட்பினை கேள்விக்குறியாக்கும் . எனவே இதில் மத்திய அரசுகள் தலையிட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ‌காத்திட நல்ல தீர்ப்பை வழங்கி தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.