#SLvIND: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்ற இலங்கை..!

இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே தவான் 13 ரன்களில் வெளியேற பின்னர் சஞ்சு சம்சன் களமிறங்கினார். சஞ்சு சாம்சன், பிருத்வி ஷா இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடி வந்த பிருத்வி ஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் தாசுன் ஷானகா ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார்.

இதையடுத்து மனிஷ் பாண்டே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில்  மனிஷ் பாண்டே 11 ரன்னில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் 4 பவுண்டரி அடித்து 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர், இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இந்திய அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 225 ரன்கள் எடுத்தனர். போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால், இலங்கை அணிக்கு 227 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக  அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மினோட் பானுகா 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து பானுகா ராஜபக்சே, அவிஷ்கா உடன் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.பானுகா ராஜபக்சே, அவிஷ்கா இருவரும் அரைசதம் விளாசினர். நிதானமாக விளையாடிய பானுகா ராஜபக்சே 65 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தனஞ்சய டி சில்வா 2 ரன் எடுத்து சேத்தன் சகாரியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் களம் கண்ட தசுன் ஷானகா ரன் எடுக்காமல் மனிஷ் பாண்டேவிடம் கேட்சை கொடுத்தார். அதிரடியாக விளையாடிய அவிஷ்கா பெர்னாண்டோ 76 ரன்னில் விக்கெட்டை இழக்க இறுதியாக இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 227ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்திய அணியில் ராகுல் சாஹர் 3 , சேத்தன் சகாரியா 2,  ஹார்திக் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம்  தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

நடந்து முடிந்த 3 போட்டியில் 2 போட்டியில் இந்திய அணியும், 1 போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றது. ஆனால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan