இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி..!

இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான இடைக்கால தடையை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது தடையானது அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் மோசமாக விளையாடி தொடரிலிருந்து வெளியேறியது.

இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு தடை விதித்தது. இருப்பினும் இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சி ஆதரவுடன் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் திடீர் திருப்பமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிரடியாக இடை நீக்கம் செய்து கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி உத்தரவிட்டது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அந் நாட்டு அரசாங்கத்தின் தலையீடு இருப்பதை காரணம் காட்டி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான அனைத்து தடைகளையும் உடனடியாக நீக்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன்: 22 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்

இடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை கவனித்து வருவதாகவும் தற்போது அதன் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது இலங்கை கிரிக்கெட்டுக்கு வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், U19 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை இலங்கை கிரிக்கெட் வாரியம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment