அனைத்து பெண்களும் பயணிக்கலாம் – தென்னக ரயில்வே அறிவிப்பு

வரும் 14-ஆம் தேதி முதல் அனைத்து பெண்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.பின்னர், தமிழகத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சிறப்பு ரயில்கள் இயங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் தெற்கு ரயில்வே அறிவித்தது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைகாட்டி பயணிக்கலாம் எனவும் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில்  வரும் 14-ஆம் தேதி முதல் அனைத்து பெண்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடற்கரை – செங்கல்பட்டு- திருமால்பூர் மின்சார ரயில்களும் 14 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண் பயணிகள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரம் வேண்டுமானலும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.