“ஒருவருக்கு முகத்தில் கொப்புளம்;குரங்கு அம்மை பாதிப்பா?” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்!

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது.

இதனால்,குரங்கு அம்மை பாதிப்புகள் பரவியுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என தமிழக விமான நிலையங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.குறிப்பாக,அமெரிக்கா,பிரிட்டன்,கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என சென்னை,கோவை உள்ளிட்ட சர்வதேச விமான நிலைய இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும்,தொடர் காய்ச்சல்,உடல் வலி,தோல் அலர்ஜி,அம்மை கொப்புளங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்,கண்டிப்பாக 21 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

இந்நிலையில்,தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்:

“சென்னை தனியார் மருத்துவமனையில் ஒருவரின் முகத்தில் கொப்புளம் இருந்தது.அவரின் மாதிரிகளை புனேவுக்கு அனுப்பி பரிசோதித்ததில் குரங்கு அம்மை இல்லை என பரிசோதனை முடிவு வந்துள்ளது.எனவே, தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும்,தமிழகத்தில் நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.சென்னை ஐஐடி கல்லூரியில் கொரோனா பாதிப்பு முழுவதும் இல்லாத நிலை உள்ளது.அதைப்போல,அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியான நிலையில்,அவர்களுக்கும் அறிகுறிகளே இல்லாத தொற்று வகைதான் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக,கல்வி நிறுவனங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது”,என்று கூறியுள்ளார்.

இதனிடையே,அனைத்து மாவட்ட சுகாதார செயலாளர்கள் தங்களது மாவட்டங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களது உடல்நிலை குறித்து தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment