தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்திற்காக லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலர் கைது.!

  • பெரம்பலூரில் தமிழக அரசின் திருமண உதவித்திட்டத்திற்கு பரிந்துரைக்க பெண்ணிடம் ரூ.2000 லஞ்சம் கேட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 
  • இதனையடுத்து தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்திற்காக ரூ.2000 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலரை பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், எறைய சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீ‌‌ஷ் என்பவருக்கு, அதே கிராமத்தை சேர்ந்த ‌ஷாலினி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 4 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை பெற கடந்த 2 வாரங்களுக்கு முன் ‌ஷாலினியின் தாய் சாரதா ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை சரிபார்க்க பெரம்பலூர் ஒன்றிய ஊர் நல அலுவலர்கள் எறைய சமுத்திரம் கிராமத்துக்கு கடந்த 27-ம் தேதி சென்றனர். அப்போது ‌ஷாலினி குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர்.

இதையடுத்து செல்போன் மூலம் ‌ஷாலினி குடும்பத்தினரை தொடர்பு கொண்ட ஷெரீன்ஜாய், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பத்தின் நகல் மற்றும் அதனை பரிந்துரை செய்வதற்காக தனக்கு ரூ.2000 ஆகியவற்றை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாலினி தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் சதீ‌ஷிடம் தெரிவித்தார். பின்னர் அவர் சதீ‌‌ஷ் பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி, ரூ.2000 ஷாலினியின் தாய் சாரதா, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இருந்த ஊர் நல அலுவலர் ஷெரீன்ஜாயிடம் நேற்று வழங்குள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சந்திரசேகர் தலைமையில், ரத்தினவள்ளி, சுலோச்சனா ஆகிய போலீஸ் குழுவினர், ஷெரீன்ஜாயை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் வேப்பந்தட்டையில் உள்ள ஷெரீன்ஜாய் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்