#Shockingvideo:கணக்கு காட்டவில்லை;பெற்ற மகனை தீ வைத்து எரித்த தந்தை!

பெங்களூரு:சாமராஜ்பேட்டை வால்மீகி நகரில் நிதித் தகராறில் தொழிலதிபர் ஒருவர் தனது 25 வயது மகனை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் சுரேந்திரா என்பவர் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை,ஆசாத் நகர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.அவருக்கு அர்பித் (25) என்ற மகன் இருந்துள்ளார்.தொழிலதிபர் சுரேந்திரா கட்டிடங்களை வடிவமைக்கும் தொழில் செய்து வந்த நிலையில்,தனது தொழிலை மகன் அர்பித்திடம் ஒப்படைத்தார்.

ஆனால்,அர்பித் தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக,ரூ.1½ கோடி பணத்திற்கான கணக்கை தனது தந்தையிடம் அர்பித் கொடுக்காமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ஆசாத் நகரில் உள்ள தங்களுக்கு சொந்தமான குடோனுக்கு சுரேந்திராவும், அவரது மகன் அர்பித்தும் சென்றுள்ளனர். அப்போது,சுரேந்திரா தனது மகன் மீது தின்னரை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் அர்பித் உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில்,வலி தாங்க முடியாமல் அலறியடுத்து கொண்டு அங்கும்,இங்கும் ஓடினார்.அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே அர்பித் உடலில் பிடித்த தீயை அணைத்தனர்.இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்பின்னர்,பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் அர்பித் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும்,அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இந்த தகவல் அறிந்த சாம்ராஜ்பேட்டை போலீசார் மருத்துவமனைக்கு சென்று அர்பித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அவரது தந்தை சுரேந்திராவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.