“பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு;இது ஒரு தேர்தல் வித்தை” – BSP தலைவர் மாயாவதி..!

பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நேற்று சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வானார்.

இதனைத் தொடர்ந்து,பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி இன்று பதிவியேற்றார். சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் சரண்ஜித்துக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில்,பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு என்பது ஒரு தேர்தல் வித்தைப்போல் தெரிவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற சரண்ஜித் சிங் சன்னியை நான் வாழ்த்துகிறேன். அவர் முன்னதாகவே முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஆனால்,பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பது ஒரு தேர்தல் வித்தை போல் தெரிகிறது.

அடுத்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் தலித் அல்லாதவரின் தலைமையில் போட்டியிடப்படும் என்பதையும் ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதன் பொருள் காங்கிரஸ் இன்னும் தலித்துகளை முழுமையாக நம்பவில்லை. பஞ்சாபில் சிரோமணி அகாலி தால் (எஸ்ஏடி-பிஎஸ்பி) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இடையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் பயப்படுகிறது”,என்று கூறியுள்ளார்.